மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவான கொடநாட்டில் நடைபெற்றை கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக பத்திரிக்கையாளர் மேத்திவ் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையில் பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும் குற்றவாளியும் பத்திரிக்கையாளர் மேத்திவ் சாமுவேலும் முதல்வரின் மீது குற்றஞ்சாட்டுவதற்கு பின்னணியில் எதிர்கட்சிகளின் சதிகள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
தெகல்காவின் முன்னாள் ஆசிரியரான மேத்திவ் சாமுவேல் ஏற்கனவே பாஜக நிர்வாகி பங்கார் லட்சுமணன் என்பவரை ஆயுத பேர ஊழலில் லஞ்சம் வாங்கியதாக அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த வீடியோவால் அப்போதைய ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசும்,பங்கார லட்சுமணனும் பதவியை இழந்தனர்.
தெகல்காவின் முன்னாள் இணைய ஆசிரியராக இருந்த மேத்திவ் சாமுவேல், ஸ்டிங்க் ஆப்ரேஷன் என்ற ஊடக புலனாய்வை அறிமுகப்படுத்தியவர்.
இன்வெஸ்டிகேசன் ஆப் ஜார்னலிசம் என்ற முறையில் அவருடைய புலனாய்வு இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருந்தாலும் பல்வேறு நேரங்களில் அதில் தோல்வியும் அடைந்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது கொடநாடு பங்களாவின் கொலை தொடர்பான வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இவர் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.
மேத்திவ் சாமுவேலை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த ஆவணப்படம் வெளியானவுடனேயே அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீப்போல் பரவத் தொடங்கியது. குறிப்பாக அந்த ஆவணக்காட்சிகளில் கொடனாடு பாதுகாவலர் ஓம் பகதூரின் கொலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் முக்கிய காரணம் என தெகல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்தீவ் சாமுவேலுடன் முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் இணைந்து டெல்லியில் பேட்டியளித்தனர்.
இந்த குற்றச்சாட்டிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் முதலமைச்சரை பதவி விலக வேண்டுமெனவும், இந்த கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் மீது அவதூறு பரப்புவதாக சென்னை குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
இதையடுத்து அடுத்தடுத்து நடந்த தொடர் மரணங்களால் பல்வேறு குழப்பங்களும் சந்தேகங்களும் வலுத்து வரும் நிலையில் இந்த வழக்கை சிபிஐ யிடம் மாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
முன்னதாக கொடனாடு கொலை தொடர்பாக பேட்டியளித்த சயன் மற்றும் மனோஜை போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் தமிழக காவல்துறையின் தரப்பில் தகுந்த பதிலளிக்காததையடுத்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டு ஜனவரி 18 ம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- செய்திக்குழு

Post a Comment