ரோஹிங்கியா முஸ்லிம்கள் மனிதர்களை சாப்பிடுகிறார்களா?

மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறிய ரோஹிங்யா  முஸ்லிம்கள், இந்து மக்களின் சடலங்களை உண்பதாக தகவல்கள் வைரலாக பரவுகின்றன. அரியானா மாநிலத்தில் பிரபலமான 'ஆஜ் தக் குட்காவ்' என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.'தைனிக் பாரத் நியூஸ்' என்ற வலைதளத்திலும்  'ஆஜ் தக் குட்காவ்' பத்திரிகையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் மேவாத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்து இளைஞர் ஒருவரின் மாமிசத்தை சாப்பிட்டபோது, பிடிக்கப்பட்டதாக இந்த வலைதளம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக பிபிசி, மேவாத்-ல் கள ஆய்வு மேற்கொண்டது. மேவாத் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கல் கூறும்போது, "இது முற்றிலும் தவறான செய்தி. ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை" என்று தெளிவாக கூறிவிட்டார்.மேவாத் மாவட்டத்தில் மொத்தம் 1356 ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கியிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துக்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து பொய் செய்தி வெளியிட்ட ஆஜ் தக் குர்காவ் செய்தியாளர் சத்பீர் பரத்வாஜிடம் பிபிசி விசாரித்துள்ளது. பத்திரிகைத்துறையில் 28 ஆண்டு கால அனுபவம் கொண்டிருக்கும் சத்பீர் பரத்வாஜ் குற்றச் சம்பவங்களை பற்றி எழுதி வருகிறார். பிபிசியிடம் பேசிய சத்பீர் பரத்வாஜ், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு, மேவாத்தில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும், ஒரு இளைஞர் கூறியதன் அடிப்படையிலேயே, 'இந்து மாமிசத்தை உண்ணும்' மனிதர்கள் பற்றிய கட்டுரையை எழுதியதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த இளைஞரை எங்கே சந்தித்தார்? மேவாத் அல்லது குருகிராமத்தின் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் இது பற்றி பேசினாரா? அல்லது இந்த விவகாரம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வேறு யாரிடமாவது பேசினாரா? என்ற கேள்விகளுக்கு சத்பீர் பரத்வாஜ் சரியாக பதில் அளிக்கவில்லை. புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய பிபிசி மேற்கொண்ட ஆய்வில், அது போலிச் செய்தி என்று தெரிய வந்தது.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை சேர்ந்தவர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த புகைப்படம், 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் பகிரப்பட்டது.
திபெத் மக்களின் இறுதிச் சடங்குகள் பற்றிய புகைப்படம் இது என்று அதில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் சடலத்தை காட்டுப் பறவைகளுக்கு உணவாக கொடுக்கும் நடைமுறை என்று புகைப்படத்துடன் பகிரப்பட்டிருக்கும் செய்தியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.இதைத் தவிர @PhramahaPaiwan என்ற பேஸ்புக் பயன்பாட்டாளர் இந்த செய்தியை 2014 ஆகஸ்ட் மாதம் பகிர்ந்துள்ளார்.

2014-ஆம் ஆண்டில், இந்த புகைப்படம் சில டிவிட்டர் பயனர்களால் பகிரப்பட்டுள்ளது. அதிலும் திபெத்தியர்களின் மரண இறுதிச் சடங்குகள் என்ற மோற்கோளுடன், இந்த புகைப்படங்கள் திபெத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திபெத்திய மக்களின் இறுதி சடங்குகளின் யூ டியூப் வீடியோக்களும் உள்ளன. அதில், சடலங்கள் கழுகு போன்ற பறவைகளுக்கு இரையாக போடப்படுவதாக காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget