இந்த காலத்தில் எதையும் விமர்சனம் செய்யும், விவாதம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒரு தீர்வை நோக்கிய கலந்தாலோசனையை கூட விவாத கண்ணோட்டத்துடன் அனுகும் மனோநிலைக்கு இன்றையவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு ஊடகங்களில் தொட்டதற்கெல்லாம் நடத்தப்படும் விவாதங்களும், சமூக வலைதளங்களின் தாக்கமும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
அனைத்தையும் தெரிந்தவர் என யாரும் இல்லை. எனவே கலந்தாலோசிப்பதன் மூலம் பலரது கருத்துக்கள் அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் தீர்க்கமான நல்ல முடிவை தீர்வை எடுக்க முடியும். சகிப்புத்தன்மை, பண்முகத்தன்மை, ஒற்றுமை, மேலாண்மை திறன் போன்றவை அதிகரிக்கும். ஆனால், விவாதம் என்பது தீர்வை நோக்கியதாக இல்லை. விவாதத்தில் பங்கேற்கும் நபர்களின் பேச்சாற்றலை நிரூபிக்கும் களமாக அமைகிறது. தங்கள் பேச்சாற்றலை நிரூபிக்க, எதிர் கருத்தாளரை பேச விடாமல் தடுக்க பல தவறான அனுகுமுறைகளை விவாதத்தில் ஈடுபடுபவர்கள் கையாளுகின்றனர். அதாவது நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்பதை காட்டும் களங்களாக மாறி தனிப்பட்ட தாக்குதல்களுக்கு வித்திடுகின்றன.
விவாதம் முடிந்தாலும் இருவர் மத்தியில் குரோத போக்கு அதிகரிக்கவே செய்கிறது. சமூக வலைதள விவாதங்களால் வெட்டுக்குத்து நடந்த சம்பவங்களும் இங்கு உண்டு. கொள்கை சார்ந்த விசயம் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருக்கும் போது அதை விவாத கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ளும் மற்றொரு நபர் முட்டாள்தனமான கேள்விகளை, தனிப்பட்ட முறையிலான கேள்விகளை எழுப்பி அவரை மடக்க நினைக்கின்றனர். ஒரே நோக்கத்தை முன்வைத்து செயல்படும் இருவர் அதற்காக வெவ்வேறு வழிமுறைகள் கையாளுவர். இருவரும் சேர்ந்து அந்த இலக்கை அடைய முயலும்போது அவர்கள் கலந்தாலோசித்தலே தீர்வை தரும். மாறாக இருவரும் விவாதம் செய்தால் ஒரு கழன்றுகொண்டு சென்றுவிடுவார்.
நான் பார்த்தவரை பல விருந்தினர்கள் பங்கேற்கும் எந்த ஒரு ஊடக விவாதமும் மக்களுக்கு ஒரு தீர்வை, தெளிவான புரிதலை கொடுப்பதில்லை. தனிநபரிடம் நடத்தப்படும் நேர்காணல்களில், நெறியாளராக இருப்பவர் தனது சாதுர்யமான கேள்விகளால் விருந்தினரிடம் தக்க பதில்களை பெற்றுத்தர வேண்டும். அது தான் மக்களுக்கு பயனளிக்கும். ஆனால், மக்களே இத்தகைய விரும்புவதில்லை என்பது சாபக்கேடு.
முதல்வன் பட அர்ஜுன் போல், ரங்கராஜ் பாண்டேவை போல், அர்ணாப் கோஸ்வாமியை போல் எதிரில் அமர்ந்திருப்பவரை பதில் சொல்ல விடாமல் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். பதில் சொல்ல முடியாத நியாயமான கேள்விகளை கேட்பதில் தவறில்லை. ஆனால், இந்த கேள்வியை கேட்டு மடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதையே குறிக்கோளாக கொண்டு கேள்விகளை தயாரிப்பது நிச்சயம் டி.ஆர்.பிக்காக மட்டுமே அன்றி பதிலுக்காக, தீர்வுக்காக அல்ல. மக்கள் மத்தியிலும் இது போன்ற ஒரு மன நோய் போல அதிகம் பரவி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது.

Post a Comment