தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா, அனைத்து மண்டலக் கல்வி இணை இயக்குநர்கள், அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் கடந்த 25.04.2018 அன்று தேதியிட்டு அனுப்பி உள்ள கடிதத்தில், ''கல்லூரிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி அல்லது இயக்கங்களின் கொள்கைகளைத் தங்களின் உரைகளில் கலந்து பேசுவதாகத் தெரியவருகிறது. இது, மாணாக்கர்களின் கல்விக்கு இடையூறாக அமையும். மேலும் இதனால், மாணவர்களின் கல்வியும் ஆராச்சி மனப்பான்மையும் பாதிக்கப்படும்.
எனவே, தங்களின் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோர், அரசியல் கொள்கைகளையும் பிற இயக்கங்களின் கருத்துகளைப் பரப்புவதையும் விவாதிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறான விழாக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசுஉதவிபெறும், சுயநிதிக்கல்லூரிகளுக்கு இப்பொருள் தொடர்பாக உரிய அறிவுரைகள், சுற்றறிக்கை வாயிலாக அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் தந்தி டிவியில் இருந்து வெளியேறிய ரங்கராஜ் பாண்டே பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அதில் பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்பாடி வருகிறார்.
அதற்கு ஒரு உதாரணம் இந்த வீடியோ: https://m.facebook.com/story.php?story_fbid=1290296574458434&id=1068366309984796
ஒரு கல்லூரியில் அவர் நிகழ்த்திய உரை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மோடியை அப்பழுக்கற்றவர், யாரும் அவரை எதிர்த்து பேச முடியாது, நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தன்னகத்தே கொண்ட மாபெரும் தலைவர் . அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் இதுவரை பிரதமர் அலுவலகம் வந்தது கிடையாது. வந்தாலும் உடனே பார்த்து விட்டு அனுப்பி விடும் நேர்மை, நியாயம் மிக்க அப்துல் கலாம் அவர்களுக்கு ஒப்பான தலைவர் என்றெல்லாம் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாமில் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பாண்டே பாஜக ஆதரவானவர் என்ற தங்களின் கணிப்பு ஒருபக்கம் உறுதியாகிவிட்டதாக பலர் விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம் பாண்டே உயர்கல்வித்துறை உத்தரவை மீறி இது போல் பேசிவருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. கம்யூனிஸ்டுகள், திருமாவளவன், திருமுருகன் காந்தி, சீமான், கமல் போன்றோர் கல்லூரிகளில் அரசியல் உரையாற்றியதை கட்டுப்படுத்த முயன்ற அரசு இதை தடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
- செய்திக்குழு


Post a Comment