‘ஆரோக்கியமான மனிதர்கள் ஜிம்களுக்குச் செல்வதில்லை’
இது சமீபத்தில் மருத்துவர்கள் மேற்கொண்ட பரப்புரை
உங்ககிட்ட ஒரு கேள்வி..
நீங்க ரொம்ப தூரம் நடந்து எவ்வளவு நாள் ஆச்சி..?
ரொம்ப நாளைக்கு முன்னால என்று தான் பெரும்பாலான நம்மவர்களின் பதில் இருக்கும்..!
அதுவும் ஏதாவது வாகனம் இல்லாம மாட்டிக்கிட்டு யாரயாவது திட்டிக்கிட்டே கோவமா நடந்துருப்போம்.
அன்றாட வாழ்க்கையில் நண்டு சுண்டுகள் உட்பட எல்லோரும் வாகனங்களை திருக்கிக் கொண்டு பறக்க தான் செய்கிறோம்.
வாகனங்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் நடப்பதற்கு வேலையே இல்லாமல் போய் விட்டது.
நடந்து செல்ல சோம்பேறித்தனம் ஒரு பக்கம் இருந்தாலும் நடப்பதை ஒரு பொருட்டாகவே நம்மவர்கள் மதிப்பதில்லை.
மருத்துவர் கண்டிப்போடு பேசினால் மட்டுமே பெரியவர்கள் நடைப்பயணம் செய்கின்றனர்.
பெரும்பாலும் காலை மாலை நேரங்களில் தொப்பை தள்ளியவர்கள் மட்டுமே இங்கும் அங்குமாக நடக்கிறார்கள்.. அதுவும் மருத்துவர் (சிலருக்கு வீட்டம்மாக்கள்) உத்தரவின் பேரில் நடக்கிறது..
ஏதோ ‘நடந்தால்’ சரி..
இன்றைய இளம் தலைமுறையினருக்கு புதிதாக ஒட்டிக்கொண்ட கலாச்சாரங்களுள் ஒன்று தான் ‘ஜிம்’.
ஒரு சிலர் அதைக்கொண்டு சில நேரம் பலன் அடைந்தாலும் பெரும்பாலும் சமூக வளைத்தளங்களில் தங்கள் அழகை பிரதிபலிக்கவே ஜிம்களில் நிரம்பி வழிகிறது ‘யூத்’களின் கூட்டம்.
ஆரோக்கியத்தை நம்மை சுற்றியே வைத்துவிட்டு மாத தவணையில் பணம் செலுத்தி ஜிம்முக்குச் செல்வது ஒரு ட்ரென்ட் ஆகவே மாறி விட்டது. அது ஒரு மாய வர்த்தக வலை (சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்).
வாரத்திற்கு 6 மணி நேரம் நடந்தால் உடல் தானாகவே ‘பிட்’ ஆகிவிடும் என்கின்றது அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு..!
ஹாவார்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஒரு வாரத்திற்கு 6 மணி நேரம் மனிதர்களை நடைப்பயணம் மேற்கொள்ளச் சொல்கிறது.
இதனால் இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களை முடிந்தளவு வராமல் தடுக்க முடியுமாம். 32 சதவீதம் இருதய பிரச்சனையால் மரணிப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
இன்றைய 9 - 5 வாழ்க்கை முறையில் நம்மில் பெரும்பாலானோர் ஏசி அறையில் கம்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறோம். இது நம் அரோக்கியத்துக்கு தீங்கு என்றாலும் முடிந்தளவு நமது உடலை நடைப்பயணம் செய்தாவது பத்திரப்படுத்த சொல்கிறார் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆல்பா பட்டேல்.
உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள எடை தூக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. நடைப்பயணம் செய்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு முடிந்தளவு 30 நிமிடங்கள் நடைப்பயணம் மேற்கொண்டால் டைப் 2 டையாபெடிஸ், ஓஸ்டியோபோரோஸில் (எலும்பு சம்மந்தமான பிரச்சனை) இருதய பிரச்சனை, புற்றுநோய், மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
முழு உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியோடு வாழ நடைப்பயணம் ஒன்றே போதுமானது.
இன்றைய காலத்தில் பலர் ஆரோக்கியம் குறைபாட்டால் பலவிதமான நோய்களுக்கு இரையாகி வருகின்றனர். ஒரு காலத்தில் புற்றுநோய் என்பது அரிதுலும் அரிதாக காணப்பட்டது. இன்றைக்கு சாதாரண காய்ச்சலை போல எங்கு பார்த்தாலும் பெருகிவிட்டது.
வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஒப்ப கொஞ்சம் நோய்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான வாழ்வை வாழப் பழகுவோம்.
நாம் செய்ய வேண்டியவை :
🚶ஆரோக்கியமான உணவை உட்கொண்டு முடிந்தளவு நடக்கத் தொடங்க வேண்டும்..முக்கியமாக குழந்தைகளை கண்டிப்புடன் நடைப்பயணம் செய்ய அறிவுறுத்த வேண்டும் (இதுக்கு முதல்ல நாம நடக்கனும்)
🚶ஆபீஸ், ஸ்கூல் போன்ற இடங்களுக்கு ரயில், பேருந்தில் செல்லலாம்(கொஞ்சம் தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை) நடப்பதற்கு வேலை கொடுங்கள்.
🚶நடக்கத் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று மாசு குறையும், காசு மிச்சப்படும், ஆரோக்கியம் நிலைக்கும்.
நோய் நொடி இல்லாத வாழ்க்கையை வாழ கொஞ்சம் கால்களை பயன்படுத்தி நடக்கத் தொடங்குவோம்..
பொது நலன் கருதி..
-அஸ்பாக் அஹமது

Post a Comment