2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை எண் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், சி.பி.எஸ்
திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
சத்துணவு கூடங்கள் மூடப்படுவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் , 7 வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரயில் நிலையம்
சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கைது நடவடிக்கைகள் மூலம்
தங்களது போராட்டத்தை நீர்த்து போக செய்ய முடியாது என அப்போது முழக்கங்களை
எழுப்பிய அரசு ஊழியர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்களில்
ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின்
கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தூரன், அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு
கேட்டு போராடவில்லை எனவும் தங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை
உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தியே
போராட்டம் நடைபெறுவதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்களை பெறுவதின் மூலம் அரசு
பட்டதாரி இளைஞர்களை கேவலப்படுத்துவதாகவும், தமிழக அரசு காலிப்பணியிடங்களை
நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறித்தி தங்களுடன் இணைந்து
பட்டதாரிகளும் போராட வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறித்தினார். இதை
அடுத்து மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Post a Comment