கடந்த நவம்பர் மாதம் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய
டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியது. இதில் அப்பகுதி மக்கள் முழுவதுமாக
வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து டெல்லி சென்ற
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்துக்கு 15
ஆயிரம் கோடி ரூபாய் கஜா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என கோரிக்கை
விடுத்தார். இதனை தொடர்ந்து தமிழகம் வந்த மத்தியக்குழு டெல்டா
மாவட்டங்களில் ஆய்வு செய்தது. இதையடுத்து தமிழகத்துக்கு மத்திய உள்துறை
அமைச்சகம் 353 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதியை வழங்கியது. இருப்பினும்
மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற
மதுரைக்கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்
குழுக்கூட்டத்தில் தமிழகத்துக்கு கஜா நிவாரணமாக ஆயிரத்து 146 கோடி வழங்க
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கஜாவால் சீரழிந்த பகுதிகளை
சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உதவி செய்யப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய அரசு முழு தொகையையும் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நிவாரணம் என்பது டெல்டா மக்களின் வாழ்வை சீர்படுத்துவதற்கே தவிர பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.


Post a Comment