சிபிஐ அமைப்பை தன் கைவசம் வைத்துள்ள மத்திய பாஜக அரசு அதனை பயன்படுத்தி பல்வேறு சித்துவிளையாட்டுக்களை நடத்தி வருகிறது. அதன் படி அலோக் குமாரை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது தொடங்கி, நாகேஷ்வர் ராவை இடைக்கால இயக்குநராக நியமித்தது, நேற்று புதிய இயக்குநராக ரிஷிகுமாரை நியமித்தது வரை பல்வேறு வேலைகளை செய்து தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைத்தும், எதிர்கட்சிகள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறது. அதன் படி மேற்குவங்கத்தில் மத்திய பாஜக அரசுக்கு பரம வைரியாக திகழும் மம்தா பானர்ஜி மீது கைவைக்க மத்திய அரசு சிபிஐயை பயன்படுத்த தொடங்கியது.
அதன் படி சிபிஐ கையில் எடுத்த அஸ்திரம் தான் சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு. இதனை விசாரித்து வந்த கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் அதன் ஆவணங்களை தொலைத்ததாக கூறி சிபியை அவரிடம் விசாரணை நடத்த கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்த கொல்கத்தா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகளை கைது செய்த கொல்கத்தா போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிபிஐ அதிகாரிகளையே மாநில போலீசார் கைது செய்து அதிரடி காட்டியது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. மம்தா பானர்ஜியின் இந்த அதிரடியை மத்திய அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பின்னர் காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்ற மம்தா, அவருடன் ஆலோசனை நடத்தி விட்டு கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்ற தர்ணா போராட்டத்தில் குதித்தார். அதன் தொடர்ச்சியாக கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கிய அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார், திரிணாமும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதோடு, மத்திய அரசுக்கு எதிராக சிபிஐ செயல்பாட்டிற்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
தற்போது, மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய உள்ளதாவும், குறிப்பாக அம்மாநில சிபிஐ இயக்குனர் மற்றும் சிபிஐ துணை இயக்குனர் இருவரையும் தற்போது போலீஸ் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் மேற்கு வங்கத்தில் மத்திய அரசு அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை குவித்துள்ளது. சிபிஐ அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் முன்னும் ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் இந்த பிரச்சனை மத்திய அரசுக்கு மேற்கு வங்கத்துக்கும் இடையிலானதாக மாறிவிட்டது எனலாம்.
- நியூசு செய்திக்குழு
Post a Comment
Very good 👍👌😊