பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் விரைவு ரயலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 7பேர் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலம் வைஷாலி அருகே இன்று அதிகாலை சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயிலின் பெட்டிகள் அடுத்தடுத்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், பயணிகள் 7 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரயில்வே நிர்வாகமும் விபத்து தொடர்பாக உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 11 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கிழக்கு ரயில்வே நிவாரண உதவியை அறிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என தெரிவித்துள்ள அவர், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அதிகாரிகள் மூலம் விபத்தின் தாக்கத்திலிருந்து விரைவில் விடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துக்கான பகுதிகளில் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், அனைத்து விதமான உதவிகளை வழங்க மாநில அரசு தயாராக உள்ளதாகவும் உறுதியளித்தார்.
பீகார் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், விபத்துக்குள்ளான பகுதியில் ரயில்வே துறை அதிகாரிகளுடன், ரயில்வே துறை நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார். ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
Post a Comment